ராசீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 தமிழர் விடுதலைக்கு பாசக மோடி அரசும் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராசீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்து உத்தரவிட்டது.
அவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து விட்டதால் இவர்களையும் ஏற்கனவே தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட்பயஸ், உள்ளிட்ட 4 பேர் என மொத்தம் 7 தமிழர் விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி முடிவு செய்தது.
தமிழக அரசின் முடிவுக்கு முந்தைய காங்கிரசு அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 20 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தது. இதையடுத்து 7 தமிழர் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்ககால தடை விதித்தது.
வழக்கை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தான் ஓய்வு பெறுவதற்கு முன் தீர்ப்பு கூறுவதாக இருந்தார். தேர்தலின் போது தீர்ப்பு கூற எதிர்ப்பு கிளம்பியதால் தலைமை நீதிபதி சதாசிவம் வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். 3 மாதத்துக்குள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவில் கூறியிருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை வருகிற 8 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு வழக்கறிஞர்கள் வாதாடுகிறார்கள்.
தமிழக அரசு வழக்கறிஞர் ஏற்கனவே வாதாடுகையில் 7 தமிழர் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக எடுத்துக் கூறினார். ஆனால் மத்திய அரசு வழக்கறிஞர், இது தீவிரவாதம் சம்மந்தப்பட்ட குற்றம் எனவே 7 பேரையும் விடுவிக்கக் கூடாது என்று வாதாடினார்.
தற்போது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாசக மோடி அரசு அமைந்துள்ளது. ஆனாலும் 7 தமிழர் விடுதலையில் பாசக மோடி அரசு, பழைய காங்கிரசின் கொள்கையையே கடை பிடிக்கும் என்றும், 7 தமிழர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுநாள் வாதாடும் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் கச்சத்தீவு வழக்கிலும் முந்தைய காங்கிரசு அரசின் கொள்கையையே புதிய அரசும் பின்பற்றியது. எனவே ராசீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றி மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் கூறும்போது, இந்த வழக்கு தொடர்பான முழுமையான விவரங்களை பாசக அரசு ஆராயும். இது ஒரு மிக மோசமான குற்றச் செயல், முன்னாள் பிரதமர் ராசீவ் காந்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை மறக்க முடியாது என்றார்.
இந்த வழக்கில் முன்பு தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத் வாதாடினார். தற்போது அவர் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டதால் அவர் மத்திய அரசு வழக்கறிஞராக மாட்டார். வேறு ஒரு வழக்கறிஞர் மத்திய அரசு சார்பில் வாதாடுவார்.
காங்கிரசு அரசுக்கும் - பாசக அரசுக்கும் தமிழர்களுக்கு பகை அரசு என்பதில் உருதியோடு செயல்ப்பட்டு வருகிறது. முந்தைய காங்கிரசு அரசுக்கு இணையாக தமிழர்களை வஞ்சிக்க பாசக மோடி அரசு போட்டி போடுகிறது.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


0 Comments