ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் புகழ் தமிழோடு சேர்ந்து நீடிக்கும் - பெ.மணியரசன் வீரவணக்கம்!

ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் புகழ் தமிழோடு சேர்ந்து நீடிக்கும் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் வீரவணக்கம்!














இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழீழப் பிள்ளைகள் தங்கள் தாய்மொழியான தமிழைக் கற்றிட, 1986இல் ஜெர்மன் நாட்டில் ஹேஜன் (Hagen) நகரில், முதல் தமிழ்ப் பள்ளியைத் தொடங்கி வழி காட்டியவர் ஐயா இராமலிங்கம் நாகலிங்கம் அவர்கள் ஆவார்.

அவர்கள், கடந்த 16.03.2015 அன்று காலமான செய்தியறிந்து நானும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் மிகுந்த துயரமடைந்தோம்.

அவர் தொடங்கிய கல்விக் கழகத்தின் பொறுப்பில் இன்று, ஜெர்மனியில் 130 தமிழாலயங்கள் செயல்படுகின்றன, அவற்றில் 6000 பிள்ளைகள் படிக்கின்றனர், 1000 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர் என்ற செய்தி தாய்த் தமிழ்நாட்டு மக்களின் பேருவகைக்கும் பெரு மதிப்பிற்கும் உரிய செய்தியாகும்.

ஜெர்மன் நாட்டில் அவர் தொடங்கிய தமிழ்ப் பள்ளி, புலம் பெயர்ந்த நாடுகள் பலவற்றிலும் தமிழீழத் தமிழர்கள் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கிட ஊக்கமளித்தது.

இவ்வாறு ஈழத்தில் மட்டுமின்றி, புலம் பெயர்ந்த வாழ்விலும் தமிழுக்கும் தமிழினத்திற்கும் தொண்டாற்றிய ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் அவர்களுக்குத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தி, தமிழோடு அவரது புகழும் சேர்ந்து நீடிக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தமது அறிக்கையில் தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments