சென்னை ஐ.சி.எப் தென்னகத் தொடர்வண்டித்துறை பொது மேலாளர் அலுவலகம் முன்பு வேலை கிடைக்காத விரக்தியில் ஐ.சி.எப் பயிற்சி மாணவர் தீக்குளித்து மரணம்!
இந்திய அரசின் தென்னகத் தொடர்வண்டித் துறை தொடர்ந்து தமிழர்களுக்கு வேலை தராமல் புறக்கணித்து வருகிறது. ஐ.சி.எப் (இந்திய இணைப்புப் பெட்டி தொழிற்சாலை), தென்னகத் தொடர்வண்டித்துறை ஆகியவற்றில் பயிற்சிப்பணி (அப்ரண்டீஸ்) முடித்த 7000 தமிழ்நாட்டு இளைஞர்கள் இன்றைக்கும் வேலை கிடைக்காமல் நடுத்தெருவில் உள்ளனர்.
ஆனால், இவர்களுக்கு வேலை தராமல் வடநாட்டுக்காரர்கள் உள்ளிட்ட அயல் இனத்தாருக்கு தமிழ்நாட்டில் வேலை கொடுக்கும் கொடுமை நடந்து வருகிறது.
கடந்த டிசம்பர் 01.12.2015 அன்று தமிழர்களுக்கு வேலை கேட்டு தென்னகத் தொடர்வண்டித்துறை பொது மேலாளர் அலுவலகம் முன்பு முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையிலும் நடைபெற்ற அப்போராட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் கைதாயினர்.
இதனிடையே இன்று காலை (10.12.2015) 8 மணியளவில் முற்றுகை போராட்டம் நடைபெற்ற அதே தென்னக தொடர்வண்டி மேலாளர் அலுவலகம் முன்பு சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஐ.சிஎப். பயிற்சி வகுப்பு மாணவர் ஹேமந்த்குமார் தீக்குளித்து இன்று மரணமடைந்தார்.
சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் 100 விழுக்காடு தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட ஹேமந்த்குமார் 1.45 மணியளவில் மருத்துவ சிகிச்சைப் பயனின்றி மரணமடைந்தார். ஐ.சி.எப். மாணவர்கள் இது போன்ற தவறான முடிவுக்கு செல்லக் கூடாது. மக்களைத் திரட்டி அநீதிக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்ய வேண்டும்.
வேலை கேட்டு தீக்குளித்து மரணமடைந்த ஹேமந்த்குமாருக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது!
தொடர்புக்கு : 9840414159



0 Comments