சென்னையில் இன்று மாலை.. கவியரசர் கண்ணதாசன் விழா..!
தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற பாடலாசிரியரும், தமிழ் மொழி ஆளுமையில் தடம் பதித்த பாவலருமான கவியரசர் கண்ணதாசன் அவர்களது 92ஆவது பிறந்த நாளையொட்டி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் சென்னையில் விழா எடுக்கப்படுகின்றது.
இன்று ஞாயிறு (23.06.2019) மாலை 5 மணியளவில், சென்னை வடபழனி கமலா திரையரங்கம் பக்கத்திலுள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க அரங்கில் நடைபெறும் இவ்விழாவிற்கு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவரும், திரைப்படப் பாடலாசிரியருமான பாவலர் கவிபாஸ்கர் தலைமை தாங்குகிறார். த.க.இ.பே. பொதுச் செயலாளர் பாவலர் முழுநிலவன் வரவேற்கிறார்.
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள்,
“இன்னிசை வாணி” திருமதி. வாணி ஜெயராம், “இறையிசையரசி” திரு. எல்.ஆர். ஈஸ்வரி, கவிஞர் பூவை செங்குட்டுவன் ஆகியோர்க்கு “தமிழ்க் கலைச்சுடர்” விருது வழங்கப் பாராட்டுரை நிகழ்த்துகிறார்.
பாவலர் கவிபாஸ்கர் எழுதிய “காற்றில் மிதந்து வருகிறார் கண்ணதாசன்” நூலின் புதிய பதிப்பை, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் வெளியிட்டு உரையாற்றுகிறார்.
சட்டப்பேரவை உறுப்பினரும், தென்னிந்திய நடிகர்கள் சங்கத் துணைத் தலைவருமான நடிகர் சேது. கருணாஸ், திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத் தலைவர் இசையமைப்பாளர் தினா, “மதுரா” பயண ஏற்பாட்டக நிறுவனர் “கலைமாமணி” திரு. மதுரா வி.கே.டி. பாலன், சேலம் ஆர்.ஆர். பிரியாணி நிறுவனர் தமிழ்த்திரு. ஆர்.ஆர். தமிழ்ச்செல்வன், அனு ஈவென்ட் நிறுவனர் தமிழ்த்திரு. கே. இராமச்சந்திரன், தாரை பயணம் தமிழ்த்திரு. தாரை கு. திருஞானசம்பந்தம் ஆகியோர் நூலைப் பெற்றுக் கொள்கின்றனர்.
திரைப்பட இயக்குநர் மு. களஞ்சியம், கவிஞர் ஜான்தன்ராஜ் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
நிறைவாக, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்திரு. செந்தமிழன் சீமான், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் ஆகியோர் நிறைவுரையாற்றுகின்றனர். பாவலர் ஆரல்கதிர்மருகன் நன்றி கூறுகிறார்.
நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், கலை இலக்கிய ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
செய்தித் தொடர்பகம்,
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை.
பேச: 9841604017, 9677229494
முகநூல்: www.facebook.com/tha.ka.e.pe
இணையம்: www.kannottam.com

0 Comments